Easy 24 News

நான் வியந்து அழைத்துப் பேசிய நடிகர் சுதீப்: தனுஷ் பகிர்வு

நான் வியந்து அழைத்துப் பேசிய நடிகர் சுதீப்: தனுஷ் பகிர்வு

 

‘நான் ஈ’ படத்தில் சுதீப்பின் நடிப்பைப் பார்த்து பாலு மகேந்திரா தன்னிடம் எவ்வளவு பாராட்டினார் என்பதை தனுஷ் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

கிச்சா சுதீப், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், டெல்லி கணேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘முடிஞ்சா இவன பிடி’. கே.எஸ்.ரவிகுமார் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ் வழங்க, ராம்பாபு இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

சுதீப் நடிப்பில் வெளியாக இருக்கும் முதல் நேரடி தமிழ்ப் படம் ‘முடிஞ்சா இவன பிடி’ என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, இயக்குநர் பி.வாசு, இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி உள்ளிட்ட பலர் சிறந்த விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “நான் பார்த்து வியந்த இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். அவர் தயாரிப்பாளர்களின் இயக்குநர். ‘ரெமோ’ படப்பிடிப்பில் இதனை உணர்ந்திருக்கிறேன். ஒரு நாள் படப்பிடிப்பில், நான் ஒரு மணி நேரம் தானே நடித்தேன். சம்பளம் எல்லாம் வேண்டாம் என தெரிவித்துவிட்டார். இறுதியில் தயாரிப்பாளர் மிகவும் வற்புறுத்தியவுடன் பாதி சம்பளத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை கொடுத்துவிட்டார்.

ஒரு நடிகராக மட்டுமன்றி, பெண் கதாபாத்திரத்துக்கு இப்படியெல்லாம் பண்ணுங்கள் நன்றாக இருக்கும் என நிறைய சொல்லிக் கொடுத்தார். அஜித் சார் நடித்த ‘வரலாறு’ படப்பிடிப்பில் அவர் செய்த விஷயங்களை எல்லாம் சொன்னார். இப்பாத்திரத்தை பண்ணுவதற்கு ஒரு தைரியம் வேண்டும்யா என்று பாராட்டினார். என்னை இவ்விழாவில் அழைத்ததற்கு ரொம்ப நன்றி.

ஒரு கதாபாத்திரத்தை முன்னால் வைத்து கொண்டு வசனம் பேசி நடிப்பதே கஷ்டம், ஆனால் ஈ என்ற ஒரு விஷயத்தை இல்லாமல் பேசி ‘நான் ஈ’ படத்தில் நடிப்பது ஒரு அற்புதமான நடிகரால் மட்டுமே முடியும். அது சுதீப் சாரால் மட்டுமே முடியும். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றிப் படமாக அமையும். உங்களை தமிழ் திரையுலகுக்கு வரவேற்கிறேன்.

நிறைய பேர் நான், தனுஷ் சார், விஜய் சேதுபதி மூவரையும் ஒரே மேடையில் பார்ப்பது சந்தோஷம் என்றார்கள். எங்கள் மூவருக்கும் ஒன்றுமில்லை. அடிக்கடி பேசிக் கொள்வோம். எனக்கு ரொம்ப பக்கபலமாக இருந்து தோள் கொடுத்தவர் தனுஷ் சார்” என்று பேசினார்.

இவ்விழாவில் பேசிய விஜய் சேதுபதி, “இப்படத்தின் ட்ரெய்லர் அருமையாக இருந்தது. இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் நடிக்கும் போது அவருக்குள் இருக்கும் இயக்குநர் வெளியே வரவே இல்லை. ஆனால், இயக்குநர் என்ற கர்வம் மட்டும் தெரிந்தது. எந்த காரணத்தைக் கொண்டும் மற்ற இயக்குநருடைய பணியில் அவர் தலையிடவே இல்லை. ‘தங்கமகன்’ படத்தில் அற்புதமாக நடித்திருந்தார். இயக்கம் மட்டுமன்றி அவர் நிறைய படங்களில் நடிக்கவும் செய்ய வேண்டும். சுதீப் சாரை பற்றி அனைவருமே நல்ல மனிதர் என்று மட்டும் சொல்கிறார்கள். நிறைய நல்ல மனங்களை சம்பாதித்து வைத்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.

இவ்விழாவில் பேசிய தனுஷ், “இமான் இசை அறிமுகமாகும் போது புதுவிதமாக இருந்தது. ஆனால் அது வளர்ந்த விதம் ரொம்ப அலாதியானது. இளையராஜா சாரின் எவர்கிரீன் மெலடி பாடல்கள் போல கொடுக்கக் கூடிய திறமையானவர் இமான். அது ரொம்ப சந்தோஷம் கொடுக்கக் கூடிய விஷயமாக இருக்கும்.

ஒருவருடைய நடிப்பைப் பார்த்து வியந்து நான் அதிகமாக யாரையும் அழைத்து பேசமாட்டேன். ஆனால் ‘நான் ஈ’ பார்த்துவிட்டு அவருடைய நம்பரை தேடிப் பிடித்து அழைத்து பேசினேன். அவ்வளவு தூரம் எனக்கு அவருடைய நடிப்பு பிடித்திருந்தது. மறைந்த பாலுமகேந்திரா சார் என்னிடம் “இந்த நடிப்பு சாதாரண நடிப்பு கிடையாது. இந்த வருடம் நான் தேசிய விருது குழுவில் இருந்தால் கண்டிப்பாக சுதீப் தான் சிறந்த நடிகர்” என தெரிவித்தார். அவர் கூறியதே தேசிய விருது தான். நான் உங்களிடம் போனில் சொல்லியிருக்கலாம். ஆனால், ஒரு மேடையில் நீங்கள் இருக்கும் சொல்ல வேண்டும் என நினைத்தேன். அதனால் தான் இன்று சொல்கிறேன்.

நான் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிற நடிகர்கள் நிறைய பேர் இங்கு இருக்கிறார்கள். சிவா, விஜய் சேதுபதி உடன் நடித்துவிட்டேன். விஜய் சேதுபதியுடன் மீண்டும் நடிக்கப் போகிறேன். அதே போல சுதீப் உடனும் நடிக்க எனக்கு ரொம்ப ஆசை. நான் இந்த விழாவுக்கு வருவதற்கு காரணமே, நான் கே.எஸ்.ரவிகுமார் சாரைப் பற்றி எப்போது பேசினாலும் அவர் என்னுடைய நண்பர் என சொல்லுவார் அப்பா. அந்த நட்புக்கு மரியாதைக் கொடுக்கவே இங்கு வந்திருக்கிறேன்.

பல பேருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த கே.எஸ்.ரவிகுமார் ‘தங்கமகன்’ படப்பிடிப்பில் 6, 7 டேக் போனால் கூட முகம் சுளிக்காமல் பண்ணிக் கொடுத்தார். ஆனால், ஒரு இயக்குநராக எதிலுமே தலையிட மாட்டார். இந்தப் படம் வெற்றிடைய வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News