எங்களுக்கு இன்று தேவைப்படுவது ஊழல் இல்லாத ஆட்சி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு நேற்று அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, ‘நான் நவம்பர் மாத நடுப்பகுதியில் இந்த பதவிக்காலத்தினை நிறைவு செய்து, எனது பதவிக்காலத்தில் எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாத ஒருவராக அரசியலில் அடுத்த நடவடிக்கைகளுக்கு செல்வேன் என்பதை கூறிக்கொள்கின்றேன்.
எங்களுக்கு இன்று தேவைப்படுவது ஊழல் இல்லாத ஆட்சி. நீங்கள் ஆட்சியாளர்களை தெரிவு செய்வதற்கு வாக்கினை பாவிக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியல் செய்பவர்கள் தொடர்பாக தேடிப்பார்க்க வேண்டும்.
நாட்டிற்காக எத்தனை பேர் அரசியல் செய்கின்றனர், தன்னலனுக்காக எத்தனை பேர் அரசியல் செய்கின்றனர் என தேடிப்பார்க்க வேண்டும்.
நாட்டிற்காக அரசியல் செய்யும் ஏராளமானவர்களை மக்கள் சேவகர்களாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முயற்சிக்கின்றது.
கட்சியாயினும் நண்பராயினும் உறவினராயினும் ஊழல் மோசடிக்கு நான் இடமளிக்கமாட்டேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

