தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதன் ஊடாக நவீன பயங்கரவாத சக்திகளை அழிக்க முடியுமென ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனநாயகமா, சர்வாதிகாரமா வேண்டுமென்பதை மக்களே தீர்மானிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தி முன்னேற்ற பாதையை நோக்கி செல்வது குறித்தே ஆராய்ந்து வருகின்றோம்.
மேலும் நல்லிணக்கத்தின் ஊடாகவே நவீன பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க முடியும்.
அந்தவகையில் இன, மத பேதங்கள் ஆகியவற்றை கடந்து ஐக்கிய இலங்கையில் அனைத்தின மக்களுக்கும் சமநீதி கிடைக்கும் ஆட்சியை நிச்சயம் நிறுவுவேன்.
ஆகையால் ஜனநாயகமா, சர்வாதிகாரமா வேண்டுமென்பதை மக்களே தேர்தலின் ஊடாக தீர்மானிக்க வேண்டும்.
எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அரசியல் அரங்கில் பல்வேறு எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறலாம்.
இந்நிலையில் மக்கள் எனக்கு வாய்ப்பளித்தால், இலங்கை வரலாற்றில் இதுவரை இருந்த அரசாங்களைக் காட்டிலும் ஒரு சிறந்த திறமையான அரசாங்கத்தை நிச்சயம் உருவாக்குவேன்” என குறிப்பிட்டுள்ளார்.

