ஈராக்கில் பேருந்து ஒன்று வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டதில், அதில் பயணித்த 5 பயணிகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
பாக்தாத்தின் தென்பகுதியில் உள்ள கெர்பாலா நகருக்கு பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று, ராணுவ சுங்கச்சாவடி அருகே சென்றபோது திடீரென வெடித்து தீப்பற்றியது.
இந்த தாக்குதலில் பேருந்தில் பயணித்த 5 பயணிகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறை அதிகாரிகள், பேருந்தில் பயணித்த ஒருவரே, தான் வைத்திருந்த வெடிகுண்டு நிரப்பிய பையை பேருந்தின் சீட்டுக்கு அடியில் வைத்துவிட்டு, அதிலிருந்து இறங்கி வெடிகுண்டை வெடிக்க செய்ததாகவும், தற்போது அவரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
ஈராக்கில் இந்த மாதம் முகரம் மற்றும் அதனைத்தொடர்ந்து நான்காவது நாள் அனுசரிக்கப்படும் அர்பயீன் ஆகியவற்றைக் கொண்ட புனித மாதம் என்பதால், ஈராக் மட்டுமல்லாது உலக நாடுகளிலிருந்து ஷியா யாத்ரீகர்கள் கர்பாலா நகருக்கு வந்து செல்வர்.
தற்போது அந்நகரில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்ட நிலையில் , இதுபோன்ற தாக்குதல்கள் ஷியா முஸ்லீம்களை குறிவைத்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

