ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்ட அவுரங்கசிப் என்ற ராணுவ வீரரின் இரு சகோதரர்கள் இந்திய ராணுவத்தில் இணைந்தனர். பூஞ்ச் மாவட்டம் மெந்தர் பகுதியை சேர்ந்த அவுரங்கசிப் என்பவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியபடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரம்ஜான் கொண்டாட ஊருக்கு திரும்பியபோது, தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.பின்னர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பழந்தோட்டத்தில் அவரது உடல் குண்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அவுரங்கசிப் மரணத்துக்கு பழிதீர்க்கும் விதமாக, மாநிலத்தில் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தனர்.இந்தநிலையில், ராணுவ பயிற்சியில் தகுதிபெற்ற அவுரங்கசிப்பின் இரு சகோதரர்கள் முகமது தாரிக் மற்றும் முகமது ஷபிக் ஆகியோர், இந்திய ராணுவத்தில் இணைந்துள்ளனர்.