குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்துள்ளார்.
அவர் இன்று (சனிக்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர், அங்குள்ள நிலைமைகளை கேட்டறிந்தார்.
அத்தோடு, தேவாலய போதகர்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட குழுவினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த கலந்துரையாடலில் தாக்குதலில் காயமடைந்தவர்களும் பங்குகொண்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கு இலக்கான தேவாலயங்களில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயமும் ஒன்றாகும்.
இந்த தாக்குதலில் சீயோன் தேவாலயத்தில் மாத்திரம் 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததுடன், பலர் காயமடைந்திருந்தனர்.
மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தாக்குதலுக்கு பின்னர் சீயோன் தேவாலயத்திற்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.