நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ஜனாதிபதி நிறுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்னம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடாளுமன்ற தெரிவுக்குழுவென்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றால் அது தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடி ஒரு இணக்கப்பாட்டுடன் அந்த விடயங்களை கையாளவேண்டும். அதைவிடுத்து, ஒருபக்கச்சார்பாக ஜனாதிபதி அதனை நிறுத்துவது என்பது ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிப்பதற்கு சமனாகும்.
ஒரு நாட்டில் ஒரு சம்பவம் நடைபெறும்போது அந்த சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்ற வகையிலேயே இவ்வாறான தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு அல்லாமல் உண்மையான குற்றவாளிகள் விசாரணை செய்யப்பட்டு எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கவேண்டிய நிலையேற்படுத்துவதே ஒட்டு மொத்த இலங்கை மக்களின் எதிர்பார்ப்பாகும்”என்றும் இதன்போது துரைரட்னம் தெரிவித்தார்.

