கிழக்கு மாகாணத்திலேயே இந்த பயங்கரவாத தாக்குதலுக்கான அடித்தளம் தீட்டப்பட்டுள்ளதாகவும், காத்தான்குடியை மையப்படுத்தி இயங்கிய பள்ளிவாயல் ஊடாக இனவாதம் வெளிப்படுத்தப்பட்டு, அதன் தொடராக மதவாதம் ஊட்டப்பட்டு பயங்கரவாத செயலாக வடிவம் எடுத்துள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இன்று(03) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அவரது அலுவலகத்தில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த தாக்குதலின் பின்னர் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். கிழக்கில் இந்த பயங்கரவாதம் அத்திவாரமிடுவதற்கு அவர்களும் ஒரு காரணமாகும். கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் மேலோங்குவதற்கான வாய்ப்புகளை தமிழ் தேசிய கூட்டமைப்பே வழங்கியது. கிழக்கு மாகாண சபையிலும் அவர்களிடம் ஆட்சி அதிகாரங்களை வழங்கி அவர்களை மேலோங்கச்செய்யும் நடவடிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பே செய்தது எனவும் முரளிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் இந்த தாக்குதலுக்கு பின்பாவது இதனை உணர்ந்து செயற்பட வேண்டும். பல விடயங்களில் கிழக்கில் பல பிரச்சினைகளை தமிழ் மக்கள் எதிர்நோக்கி வந்தனர். தமிழர்களின் வளங்கள் அபகரிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

