சவூதிக்கு சார்பான இரு இலத்திரனியல் ஊடகங்கள், கலாநிதி யூசுப் அல்கர்ழாவியும் இன்னும் இருவரும் காணப்படக் கூடிய புகைப் படப்பிரதி ஒன்றை வெளியிட்டு, அதில் இருக்கின்ற இருவரில் ஒருவர் இலங்கை குண்டு வெடிப்பில் தலைமை தாங்கிய ஸஹ்ரான் ஹாஷிம் என வெளியிட்டுள்ள தகவல் பொய்யானது என சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.
சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றியம் இந்தத் தகவல் பொய்யானது என உறுதிப்படுத்தியுள்ளதுடன் பொய்யான தகவலைப் பரப்பிய ‘அல்அரபிய்யா’, ‘பஸ் அல்அரபி’ ஆகிய ஊடகங்களைக் கண்டித்துள்ளதுடன் அவற்றின் செயலை ‘ஊடகக் குற்றச் செயல்’ எனவும் வர்ணித்துள்ளது.
குறித்த போட்டோ பற்றி அல்ஜஸீரா செய்தி ஊடகம் தெளிவுபடுத்துகையில் அது, 2016ல் எடுக்கப்பட்டது என்றும், அதில் அல்லாமா கர்ழாவியின் வலப்புரத்தில் இருப்பவர் அறிஞர் ஸல்மான் நத்வி என்றும் இடப்புரம் இருப்பவர் கலாநிதி ஆதில் ஹராதி என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய இஸ்லாமிய அழைப்பாளரான ஸல்மான் நத்வியையே மேற்படி இரு ஊடகங்களும் ஸஹ்ரான் ஹாஷிம் என அரபுலகில் பிழையான தகவலைப் பரப்ப முயற்சித்துள்ளன. கடந்த 2017 இல் சஊதி அரசு கடாருடனான சகல உறவுகளையும் துண்டித்துக் கொண்ட போது, கஃபதுல்லாவின் இமாம் சுதைஸி மேற்படி சஊதியின் நடவடிக்கையினை சரிகண்டு சஊதி மன்னன் மற்றும் அவரது மகன் முஹம்மத் பின் சல்மான் ஆகிய இருவருக்காகவும் பிரார்த்தனையும் செய்தார்.
அதற்காக சல்மான் நத்வி, சுதைசியைக் கண்டித்து அரபியில் எழுதிய கடிதம் ஏனைய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு சமூகவலைத் தளங்களில் வைரலாகப் பரவியது.
கலாநிதி அல்லாமா யூசுப் அல்கர்ழாவியையும் அவர் வாழும் கடார் நாட்டையும் பயங்கர வாதத்துடன் தொடர்பு படுத்துவதற்காக சஊதி, டுபாய், எகிப்து ஆகிய நாடுகள் தீவிர முயற்சியகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒன்றாக சஊதியின் பிரபல இலத்திரனியல் பத்திரிகையான ‘உக்கால்’ இன்று வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் கட்டாரை பயங்கர வாதிகளின் கோட்டை என வர்ணித்துள்ளது.
கலாநிதி யூசுப் அலகர்ழாவி நடுநிலைத் தன்மையை வலியுறுத்தி தீவிரவாத, பயங்கரவாத சிந்தனைத் தாக்கங்களில் இருந்து முஸ்லிம் இளைஞர்களைப் பாதுகாப்பதற்காக பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அடிப்படை வாத, தீவிரவாத, பயங்கரவாத அமைப்புக்களும், அமெரிக்க ஆதரவு முஸ்லிம் நாடுகளும் அவரைப் பயங்கர வாதியாகக் காட்ட முயற்சிக்கின்றமை புதிராகவே இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

