பிரித்தானியாவில் கைதுசெய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சின் உரிமை, அதிகாரிகளால் பாதுகாக்கப்பட வேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
அவரை தமது நாட்டிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா கோரியுள்ள நிலையில், ஒப்படைத்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட சகல விடயங்களிலும் அசாஞ்சின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.
பிரித்தானியாவிலுள்ள ஈக்குவடோர் தூரதகத்தில் நேற்று அசாஞ் கைதுசெய்யப்பட்ட நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் பேச்சாளர் ரவீனா சம்தசனி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அசாஞ்சின் கைதிற்கு பின்னர் ஐ.நா.வின் விசேட நிபுணர்கள் நேற்றிலிருந்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தனியாள் உரிமை தொடர்பான ஐ.நா.வின் விசேட பிரதிநிதி ஜோ கன்னடசி அசாஞ்சை சந்திக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஐ.நா. பேச்சாளர் கூறியுள்ளார்.
அமெரிக்கா இரகசிய இராஜதந்திர ஆவணங்களை வெளிப்படுத்தியதாக அசாஞ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவரை கைதுசெய்ய அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் முயற்சித்த நிலையில், ஈக்குவடோர் அவருக்கு வழங்கிய அகதி அந்தஸ்தை பயன்படுத்தி பிரித்தானியாவிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்திருந்தார். ஈக்குவடோர் வழங்கிய அகதி அந்தஸ்து 7 வருடங்களின் பின்னர் மீளப் பெறப்பட்ட நிலையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

