இந்திய விமானப் படை விமானி அபினந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருக்கும் செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தை நினைத்துப் பெருமிதம் கொள்வதாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி ட்விட்டரில் பதிவிட்டுருக்கிறார்.
புல்வாமா தாக்குதல் நடந்தபோதும் இது போன்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். புல்வாமா தாக்குதலுக்குப் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டியபோது, அதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான், ”விரைவில் இந்தியாவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காகவே இப்படிப்பட்ட வேலைகளைச் செய்துவிட்டு பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்துகின்றனர். ஒருவேளை பாகிஸ்தான் செய்திருந்தால், அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பியுங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்திருந்தார்.
பாக்., பிரதமரின் கருத்துக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான ஷாகித் அஃப்ரிடி ‘ பிரதமர் இம்ரான் முற்றிலும் தெள்ளத் தெளிவாகப் பேசியிருக்கிறார்’ என்று எனக் குறிப்பிட்டுருந்தார். இது இந்தியாவில் இருக்கும் அஃப்ரிடியின் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்திய விமானப் படை விமானி அபினந்தனின் வீடியோவைப் பதிவிட்ட அஃப்ரிடி “பாகிஸ்தான் ராணுவப்படையை நினைத்துப் பெருமைக் கொள்கிறேன். எங்கள் எதிரிகளையும் இப்படிதான் கணிவுடன் நடத்துவோம். இந்தியாவால் தொடங்கப்பட்ட இந்த போர் இப்போது முடிவுக்கு வர வேண்டும். நாங்கள் அமைதியை விரும்பும் நாடு. இதற்கு ஒரே தீர்வுப் பிரதமர் இம்ரான் கான் கூறியது போல் இருநாடுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே’’ என்றுக் குறிப்பிட்டுள்ளார்.