பொலன்னறுவையிலுள்ள சோழர்காலத்திற்குரிய சிவன் ஆலயத்திலிருந்து இலங்கையின் வரலாற்று சான்றுகள் சில மீட்கப்பட்டுள்ளன. ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளின்போது, அவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
புனரமைப்பதற்காக ஆலயத்தின் பகுதியொன்றை உடைத்தபோது உலோக பெட்டகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் அடிப்பகுதியில், பல நூற்றாண்டுகளிற்கு முன்னர் அமைக்கப்பட்ட வீடு ஒன்றும், வேறு சில கட்டடங்களின் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில், மத்திய கலாசார நிதியத்தின் பொலன்னறுவை அலுவலகம், தகவல் வெளியிட்டுள்ளது.
சில மாதங்களின் முன்னர் வரலாற்று சிறப்பமிக்க சிவன் ஆலயத்தின் சுவர் பகுதி உடைந்துள்ளது. அதனை சரிசெய்யும் நோக்கில், அகழ்வு இடம்பெற்றது. இதன்போதே முக்கியத்துவம் மிக்க வரலாற்று சான்றுகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த வரலாற்று ஆதாரங்களில் சிவப்பு, நீல நிறத்திலான நிறப்பூச்சு பூசப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் மிக்க இந்த தொல்பொருள் சின்னங்கள், பராக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக்கு முற்பட்டவையாக இருக்கலாமென தொல்பொருள் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வரலாற்று சின்னங்களின் மூலம், பல்வேறு வரலாற்று தகவல்கள் வெளியாகலாமென அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

