ஒருநாடு என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டதால் ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் மட்டுமே இங்கு முன்னுரிமை என்பது நாம் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் அல்ல என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஒரு மதத்திற்கும், ஒரு இனத்திற்கும் உரிமையை கொடுத்துவிட்டு எம்மால் தேசிய உணர்வுடன் பேச முடியாது எனவும் அவர் கூறினார்.
பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“எனது அமைச்சின் கீழ் பல திணைக்களங்கள் உள்ளன. அரச கரும மொழி திணைக்களம், ஆணைக்குழு, அரச சாராத நிறுவனங்களின் தேசிய செயலகம், காணாமாற்போனோர் அலுவலகம், தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு செயலகம், தேசிய கல்வி பயிற்ச்சி மொழி நிறுவனம் உள்ளிட்டவை இருக்கின்றன. ஆனால் இந்து மத கலாசார திணைக்களம் அவ்வாறு இருக்கவில்லை.
ஆகவே இதனையும் அமைச்சின் கீழ் நிரந்தர திணைக்களமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றேன்” என மனோ கணேசன் கூறினார்.

