மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமையவுள்ள அரசாங்கத்தில், தேசியம் மற்றும் இராணுவத்தினரின் சுயகௌரவத்தை பாதுகாக்கும் வகையிலான ஜெனீவாத் தீர்மானமொன்றை கொண்டுவருவோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைவர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில், இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் “ஜெனிவா, மனித உரிமைகள் பேரவை பெப்ரவரி 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்படவுள்ளன.
இதற்கு இலங்கை அரசாங்கமும் தயார் நிலையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடானது தேச துரோகமானது என்பதே எமது கருத்தாகும்.
2015, 2017 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி, எந்தவொரு பின்விளையும் யோசிக்காமல் தான் சர்வதேசத்துக்கு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.
ஆனால், இதனை நிறைவேற்றிக்கொள்ள இன்னும் அரசாங்கத்தால் முடியாதுள்ளது. இவ்வாறு அரசாங்கத்தினால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இந்தப் பிரச்சினையால் இராணுவத்துக்குத் தான் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அதன் ஓர் அங்கமாக இராணுவத்துக்கு எதிராக வழக்குகளைத் தொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த செயற்பாடுகளில் பின்னணியில் புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் இருக்குமோ எனும் சந்தேகமும் எமக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் எல்லாம் எமது நாட்டுக்குப் பொறுந்தாத ஒன்றாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருட ஜெனிவாக் கூட்டத்தொடரின்போது சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் அனுமதியளிக்கப் போவதில்லை என்றுத் தெரிவித்திருந்தார்.
அந்தவகையில், இவ்வருட இறுதிக்குள் நிச்சயமாக ஸ்தாபிக்கப்பட்டவுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் ஊடாக, புதிய ஜெனிவாத் தீர்மானமொன்றைக் கொண்டுவர நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இது இந்த அரசாங்கத்தில் நிறைவேற்றப்பட்ட ஜெனிவா பிரேரணையை விட முற்றிலும் மாறப்பட்டதாகும். தேசியம் மற்றும் இராணுவத்தினரின் சுயகௌரவம் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலேயே இந்த புதிய பிரேரணை அமையும்.
இதன் ஊடாக நாம் நல்லிணக்கத்துக்கு எதிராக செயற்படுகிறோம் என்று அர்த்தமில்லை. ஆனால், புலம்பெயர் தமிழ் அமைப்பினரின் தேவைக்கு இணங்க எம்மால் செயற்பட முடியாது. இதற்காகவே இந்த செயற்றிட்டத்தை நாம் கொண்டுவரவுள்ளோம்.” என கூறினார்.

