“நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன்” ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டவர் ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் எஸ்.தணிகைவேல்.
நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும், தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருப்பவர். தற்போது ‘ஒற்றைப் பனை மரம்’ என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார்.
படம் பற்றி தயாரிப்பாளர் கூறியதாவது,
“இலங்கையில் போர் முடிவுறும் இறுதி நாட்களில் ஆரம்பிக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’ படம், சமகால சூழலில் முன்னாள் போராளிகளும், மக்களும், முகம் கொடுக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக உருவாக்கி இருக்கிறார்கள்.
யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப் போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் உங்களை அழைத்துச் சென்று, ஈழத்தில் கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ வைத்து வதைத்து விடும் அளவிற்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இத் திரைப்படத்தை தயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை இப்படம் கண்டிப்பாக கொடுக்கும். நான் தயாரித்ததில் கிடைத்த மகிழ்ச்சி, நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கு புரியும்’ என்றார்.
இப்படம் 37 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 12 விருதுகளையும் இப்படம் குவித்திருக்கிறது.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார். தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து இசையமைத்திப்பது படத்திற்கு ஒரு உயிரோட்டமாக அமைகிறது.
சிறந்த இயக்குனர் விருது பெற்ற ‘மண்’ பட இயக்குனர் புதியவன் ராசையா இயக்கத்தையும், தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர்.
முக்கிய பாத்திரங்களாக புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி , மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

