கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் பரீட்சையில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் எமது ஊடகப்பிரிவுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தற்போது வெளியாகியுள்ள கிழக்குமாகாண சபை முகாமைத்துவ உதவியாளர் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் இன ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ் மாணவர்களுக்கான ஆக உயர்ந்த வெட்டுப்புள்ளியாக 130 அறிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் மாணவர்கள் தொடர்ச்சியாக கிழக்கு மாகணசபையினால் இன ரீதியாக கல்வி துறையில் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த பட்டதாரிகள் ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்து மாகாண சபையால் அறிவிக்கப்பட்ட வெட்டுபுள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு நியமனம் வழங்காமல் அநீதி அழைக்கப்பட்டுள்ளது. இதனையும் இந்த மாகாணசபை பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட பட்டதாரிகளையும் உள்வாங்க வேண்டும்.
தொடர்ச்சியாக இவ்வாறான புறக்கணிப்புகள் இடம்பெறாமல் முகாமைத்துவ உதவியாளர் பரீட்சையில் தமிழர்களுக்கு இவ்வாறான பாதிப்புக்கள் இடம் பெறாமல் கிழக்கு மாகாண சபை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார் .
மேலும் எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ள வடக்கு கிழக்கு ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் பரீட்சையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதி தொடர்பில் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் கோடீஸ்வரன் எம்.பி எமது ஊடக பிரிவுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது கூறினார்.

