முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் பறிபோன சுதந்திரம் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னரே அனைத்து மக்களுக்கும் கிடைக்கப்பெற்றது. அச்சுதந்திரத்தை பாதுகாக்கவே ஐக்கிய தேசிய கட்சிக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கியதென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது.
நாட்டில் மஹிந்தவின் ஆட்சி நிலவிய காலத்தில் தமிழ் பிரதேசங்கள் உட்பட பெரும்பாலான பகுதிகளில் சுதந்திரமற்ற நிலைமை காணப்பட்டது.
மேலும் தங்களுடைய தேவைகளை போராட்டத்தினூடாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமையே காணப்பட்டது.
அந்தவகையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு அரசியல் புரட்சியின் காரணமாக அனைத்து மக்களும் சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் மக்களும் எந்ததொரு அச்ச உணர்வின்றி தமது செயற்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
இதேவேளை சுதந்திர ஊடகத்துறை, சுதந்திர நீதித்துறை, சுதந்திர தேர்தல்துறை போன்றன தோன்றம் பெற்றன. எனவே, இத்தகைய நிலைமை மீண்டும் மாறிவிடக்கூடாது என்பதில் தெளிவாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இருந்தது.
அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைக்கு தீர்வு காணும் பொருட்டு அங்கு யாரை ஆதரித்தார்கள் என்பது இல்லை, யார் வரக்கூடாது என்பதற்காகவே நாங்கள் சில முடிவுகளை எடுக்கவேண்டியவர்களாக இருந்தோம்.
சில கட்சிகள் கூறுவது போன்று நடுநிலையாக நிற்கவேண்டும் என்பது நிச்சயமாக மஹிந்தவின் ஆட்சியைத் தொடருவதற்கான உறுதுணையான ஒரு நிகழ்ச்சி நிரல் என்பது உங்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்திருக்கும்.
அத்துடன் நடுநிலையாக நிற்கவேண்டுமென கூறியவர்கள் அனைவரும், பணத்துக்காக பின் சென்றவர்கள் ஆவர்” என சிவமோகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

