தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்கள் கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) நினைவுகூரப்பட்டனர்.
கிளிநொச்சி அறம்செய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, சுடரேற்றி, மலர் தூவி உயிர்நீத்த மாவீரர்களுக்கு உறவுகள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமாகியது.விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது இன்னுயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்த முதலாவது மாவீரர் சங்கரின் நினைவாக, அவர் உயிரிழந்த கார்த்திகை 27ஆம் திகதி, விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனினால் மாவீரர் தினமாக 1987ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.
அன்றிலிருந்து தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த விடுதலைப்புலிகளை நினைவுகூரும் அஞ்சலிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை கோரி கோப்பாய் பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

