பாராளுமன்றத்திலுள்ள கட்சிகளுடைய உறுப்பினர்களின் எண்ணிக்கையின் விகிதாசாரத்தின் அடிப்படையிலேயே பாராளுமன்ற தெரிவுக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், அரசாங்க தரப்புக்கு கூடிய உறுப்பினர்களை வழங்குவது பொருத்தமாற்ற நடவடிக்கையாகும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கட்சிக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற தெரிவுக் குழு அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. இதன்போது, மஹிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தமக்கு அதிக உறுப்பினர்களைத் தெரிவு செய்து கொள்வதற்கான அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
இவரது வாதம் அர்த்தமற்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாத ஒரு குழுவுக்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவில் அதிக உறுப்பினர்களை வழங்குவது அடிப்படையற்ற ஒன்றாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

