பாராளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் நடாத்துவதற்கான பிரேரணையொன்றை நிறைவேற்றுவதற்கு சகல கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை நேற்று (16) சந்தித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வை முன்னிட்டு அதிர்ச்சியும், கவலையும் அடைகின்றேன். எமக்கு இந்த அராஜக நிலைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. எம்மிடம் பெரும்பன்மை ஆதரவு உள்ளது. எமக்கு அதனை நிரூபிக்க முடியும். இந்த நாட்டில் சட்ட ரீதியாக அமைக்கப்பட்ட அரசாங்கம் நாமே. எமக்கு அந்த அரசாங்கத்தைக் கொண்டு செல்ல முடியும். சபாநாயகர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்துக்கான பதிலை நாம் எதிர்பார்த்துள்ளோம்.
தேவைப்படின் ஜனாதிபதியை நேரில் சந்தித்துப் பேச தயாராகவுள்ளோம். எந்த நேரத்திலும் ஜனாதிபதியை சந்திக்க எமது கூட்டணியின் கட்சித் தலைவர்கள் தயாராகவுள்ளனர். எமக்கு எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். உறுதியான அரசாங்கமொன்றைக் கொண்டு நடாத்தத் தேவையான உறுப்பினர்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளும் வரையில் நாட்டில் இந்த அராஜக நிலைமை தோன்றும். எமக்கு அராஜக நிலைமை அவசியமில்லை. ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் பொதுத் தேர்தலை நடாத்த தாம் தயாராகவுள்ளோம். இது தொடர்பான பிரேரணையை நிறைவேற்றவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

