வவுனியாவில் ஏற்பட்ட வறட்சி நிலை காரணமாக 13 ஆயிரத்து 405 விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கூலித் தொழில் செய்வோர் பாதிப்படைந்துள்ளதாகவும், அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் பி.தனராஜ் தெரிவித்துள்ளார்.
வவுனியாவின் வறட்சி பாதிப்பு குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டமும் வறட்சியால் பாதிப்படைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் உள்ள பல நன்னீர் நிலைகள், குளங்கள் என்பவற்றில் உள்ள நீர் வற்றியுள்ளது. அத்துடன் மழை வீழ்ச்சியும் குறைவாக உள்ளது. இதனால் மழை மற்றும் குளங்களை நம்பி மேற்கொள்ளப்பட்ட பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் என்பனவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாய மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் கூலி வேலை செய்வோர் பாதிப்படைந்துள்ளனர்.
குறிப்பாக, வவுனியா பிரதேச செயலக பிரிவில் 6,686 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 2207 பேரும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 460 பேரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 4052
பேரும் ஆக 13405 பேர் கூலித் தொழிலை மேற்கொள்ள முடியாது பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இவர்கள் தொடர்பான விபரங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக பெறப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

