நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக குறுமிளகு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், கேரளா மாநிலம் வயநாடு பகுதிகளில் குறுமிளகு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
கூடலூர், பந்தலூரில் 800 எக்டரில் கறிமுண்டா, பன்னியூர், வயநாடன் போன்ற குறு மிளகு ரகங்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
நீலகிரியில் கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழை காரணமாக குறு மிளகு பயிரில் வேர் பகுதியில் அதிக மழைநீர் இறங்கியதால் குறுமிளகு செடிகள் அழுகிய நிலையில் காணப்படுகிறது. இதனால் வாடல் நோய் தாக்கப்பட்டு மகசூல் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடந்த மாதம் ஒரு கிலோ காய்ந்த குறுமிளகு ₹320க்கு சந்தையில் விற்பனையானது. தற்போது ₹50 அதிகரித்து ₹370க்கு குறு மிளகு விற்பனை செய்யப்படுகிறது. விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக தேயிலை விலை வீழ்ச்சி அடைந்த நிலையில், அதனை ஈடு செய்யும் விதமாக குறுமிளகு விவசாயத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளுக்கு மீண்டும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் மிளகு விற்பனை செய்ய அரசு கொள்முதல் செய்தால், தங்களுக்கு நல்ல விலை கிடைக்கும் .
அரசு விற்பனை மையம் இல்லாததால், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகள் குறைந்த விலைக்கு குறு மிளகை வாங்கிச் செல்கின்றனர் என விவசாயிகள் கூறுகின்றனர்.
தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெயலட்சுமி கூறியதாவது: குறுமிளகு பயிரில் ஏற்பட்டுள்ள வாடல் நோயை கட்டுப்படுத்த, செடியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
மேலும் செடிகளை சுற்றி கால்வாய் எடுத்து பாதுகாக்க வேண்டும். விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக இலவசமாக குறுமிளகு நாற்று வழங்கப்படுகிறது. மேலும் இயற்கை மருந்துகள் மற்றும் பூச்சி மருந்துகள் வழங்கப்படுகிறது என்றார்.

