டில்லியில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள விக் என அழைக்கப்படும் டோப்பாக்களை திருடியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விக் எனவும் டோப்பா எனவும் அழைக்கப்படும் வழுக்கை தலையர்கள் மற்றும் நாகரீக மங்கையருக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். இவ்வாறு டோப்பாக்கள் தயாரிக்கப்படும் நிறுவனங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளன. அத்துடன் இத்தைகைய டோப்பாக்கள் இந்தியாவில் இருந்து பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
டில்லியின் புறநகர் பகுதியான நெங்க்லோய் என்னும் இடத்தில் டோப்பாக்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் இருந்து ரு. 25 லட்சம் மதிப்பிலான டோப்பாக்கள் மற்றும் தலைமுடியும் ரூ. 30000 ரொக்கம் மற்றும் மொபைல் போன்களும் திருடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மங்கள் செயின் மற்றும் அஜய்குமார் என்னும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் அஜய்குமார் திருட்டு நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு தலைமுடி விற்பவர் போல வந்து கடையை நோட்டமிட்டு விட்டு சென்றுள்ளார். அவர் வந்து சென்ற இரு தினங்களில் அதே வளாக மாடியில் தங்கி இருந்த ஜகாங்கிர் உசைன் மற்றும் அவர் சகோதரர் தாஜுதீன் ஆகியோரும் மங்கள் ஜெயின் என்பவரும் அந்தக் கடைக்க்கு வாடிக்கையாளர்கள் போல் வந்துள்ளனர்.
திடிரென ஒரு நாட்டுத் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அவர்கள் அந்தக் கடையில் இருந்த டோப்பாக்கள், 5 மூட்டை தலை முடி, ரூ.30000 ரொக்கம் மற்றும் மொபைல் போனை மிரட்டி பிடுங்கி உள்ளனர். அதன் பிறகு அந்தக் கடையில் இருந்த ஒரு அறையில் ஊழியர்களையும் உரிமையாளரையும் அடைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
தீவிரமாக விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் உத்திரப்பிரதேச மாநிலம் பரேலியில் இருந்த மங்கள் ஜெயின் மற்றும் அஜய்குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தலைமுடி கைப்பற்ற பட்டுள்ளது. கொள்ளையில் சம்பந்தபட்ட மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
