கூட்டு அரசு புதிய அரசமைப்பைக் கொண்டு வராது. வடக்கில் உள்ள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே அதைக் கொண்டுவரப்போவதான கதைகளைக் கூட்டு அரசு கட்டவிழ்த்து விடுகின்றது.
இவ்வாறு மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற சிறிலங்கா பொது மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. அரசமைப்பை மாற்றுவதற்காகவே அரசமைப்பு நிர்ணய சபை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக நாடாளுமன்றத்தை அரசமைப்புச் சபையாக மாற்றியுள்ளதாக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பன்னாட்டுச் சமூகத்திடம் தெரிவித்துள்ளார்.அவ்வாறெனின் ஏன் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வர முனையவேண்டும்.
அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் மக்கள் விடுதலை முன்னணியும் அங்கம் வகிக்கிறது. வழிநடத்தல் குழுவிலேயே அது குறித்து பேசித் தீர்மானித்திருக்கலாம். 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை.
நல்லாட்சி அரசு, அரசமைப்பை மாற்றப்போவதில்லை. வடக்கிலுள்ள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கே புதிய அரசமைப்புக் கொண்டுவரவுள்ளதாக கதைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றிக்கொண்டே நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்தது. தற்போதும் அவ்வாறான செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றது –என்றார்.

