ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நகரில் 713 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் இன்று அதிகாலை, பொலிஸ் பரிசோதகர் மொஹமட் ஜெமில் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றில் வந்த நபர் ஒருவரைச் சோதனை செய்த போதே, குறித்த நபரிடமிருந்து ஆறு சிறிய பக்கட் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த ஹெரோயின் பக்கட்டுக்கள் மிகவும் சூட்சபமான முறையில் உடம்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவை கொட்டகலை பிரதேசத்திற்குக் கொண்டு செல்வதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பத்தனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் ஹெரோயின் பக்கட்கள் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

