மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பால் நாடாளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இன்று சமர்பிக்கப்படவுள்ள ஒத்திவைப்புவேளைப் பிரேரணையில் கூறப்பட்டுள்ளதாவது,-
2017ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்துடன் 3 மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது.தேர்தல் முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக மாகாண சபை தேர்தல் சட்ட விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதனால் மேற்கூறிய 3 மாகாண சபைகளினதும் தேர்தல்கள் இன்று வரை நடைபெறாதுள்ளது.
அதேவேளை, 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்துடன் மேலும் மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. தேர்தல் சட்ட சீர்த்திருத்தங்கள் இன்னும் முடிவடையாதுள்ளதனால் எந்தவொரு மாகாண சபைக்கும் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.
தேர்தல் சட்ட விதிகளின் திருத்தமானது உடனடியாக செய்து முடிக்கப்பட வேண்டிய தேவை இதனால் எழுகின்றது. இதன் மூலம் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மக்களின் உரிமைகள் மேலும் மறுக்கப்படாமல் செய்ய முடியும்.
மாகாண சபை தேர்தல் சட்ட விதிகளில் சீர்திருத்தத்தை உடனடியாக மேலும் தாமதமின்றி செய்து முடிக்குமாறு நாம் அரசை வலியுறுத்துகின்றோம்.
எதிர்வரும் 2 மாதங்களுக்குள் இந்த சீர்திருத்தங்களை செய்யத் தவறும் பட்சத்தில் 2017ஆம் ஆண்டு மாகாண சபை (திருத்தம்) சட்டம் இல.17 உடனடியாக நீக்கப்படுவதன் மூலம் தேர்தலை உடனடியாக நடத்தி முடிக்க அரசை நாங்கள் வலியுறுத்துகின்றோம் – என்றுள்ளது.

