தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பின் மூலம் தீர்வு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் பொறுப்புக்கூறல், நாடு, நகர, கிராம அபிவிருத்தி ஆகிய மூன்று துறைகளிலும் இதுவரையில் அரைக்கிணற்றைக்கூட எமது அரசு தாண்டவில்லை என்பது அப்பட்டமான உண்மை.
இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் மனோ கணேசன். கொழும்பில் நடந்த கம்பன் விழாவில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார் என்று அவரது ஊடகக் குறிப்பு தெரிவித்தது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை தலைமை அமைச்சர் தொடர்பில், தீர்மானக்கரமான நம்பிக்கை வாக்களிப்பு நான்காம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெறப் போகிறது. இலங்கை வேந்தன் இராவணனை அவனது சகோதரன் கும்பகர்ணன் கைவிட வில்லை. ஆனால், இன்னொரு சகோதரன் விபீடனன் கைவிட்டான். இதில் நாம் என்ன செய்வது? கும்பகர்ணனையா, விபீடனனையா, வழிகாட்டியாகக் கொள்வது என நாட்டின் வடக்கிலும், தெற்கிலும் நம்மவர் சிலருக்கு இங்கே குழப்பம். நம்மில் சிலர் அளவுக்கு அதிகமாகப் புல்லரித்துப் போய், திடுக்கிட்டுப் போய், இவர்களில் ஒரு சாராரை இராமர்களாகவும், அடுத்த சாராரை இராவணர்களாகவும் கருதிக்கொண்டு தடுமாறுகிறார்கள்.
எனக்கு ஒரு குழப்பமும் கிடையாது. ஏனென்றால் இங்கே இராமனும் இல்லை. இராவணனும் இல்லை. என் மனசாட்சிப்படி என் சமுதாயம் தான் எனக்கு முக்கியம். இரு தரப்பும் அசுரர்கள்தான். ஓர் அசுரனை அனுப்பினால் வந்து அமரப்போவதும் இன்னொரு அசுரன்தான். ஆகவே இரண்டு அசுரர்களில் எந்த அசுரன், அசுரத்தனம் குறைந்தவன் என்று கூட்டிக்கழித்துத் தேட வேண்டியதும், அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், அபிவிருத்தி ஆகிய இலக்குகளை அடைய புதிய வழிகளைத் தேடுவதும்தான் எங்கள் நோக்கம்.
புதிய வழிகளைத் தேட வேண்டும் என்று நான் கூறினேன். ஏன் அப்படி கூறினேன்? நாம் கையாண்ட பழைய வழிகளில் பல பயன் தரவில்லை. சில அரைகுறைப் பயன்களைத் தந்துள்ளன. சில பிச்சை வேண்டாம், நாயை பிடி என இருந்த இருப்புக்கும் வேட்டு வைத்து விட்டன.
தமிழரசு தந்தை செல்வா சத்தியாக்கிரக வழியைத் தேடி, பின் உள்ளூரில் ஒப்பந்தங்களைச் செய்து தீர்வைத் தேடும் வழியை முன்னெடுத்தார். அந்த வழிக்குப் பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான், மாமனிதர் அஷ்ரப் ஆகியோரும் ஒவ்வொரு காலகட்டத்தில் வலுச் சேர்த்தனர். பின் கூட்டணித் தலைவர் அண்ணன் அமிர்தலிங்கம் பாரதத்தின் துணையுடன் தீர்வு தேடும் வழியை நாடினார். அதையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் ஆயுதப் போராட்ட வழியை முன்வைத்துப் போராடினார்.
இன்று கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன், உலக சமூகத்தை துணைக்கு கொண்டு, ஐ.நா. சபை மூலம் தீர்வு தேடும் வழியை முன்வைத்து அவரால் இயன்றதைச் செய்து வருகிறார். இதன்போது தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் என்ற முறையில் நான், சகோதர இனங்களுக்கு எமது இன்னல்களை, அபிலாஷைகளை எடுத்து கூறி தீர்வு தேடும் சகவாழ்வு வழியை முன்வைத்து என்னால் இயன்றதைச் செய்து வருகிறேன். இந்த அனைத்து வழிகளும் தீர்வைக் கொண்டு வராவிட்டால், கடவுள் விட்ட வழிதான்.
தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அர சமைப்பின் மூலம் அரசியல் தீர்வு தேடும் பணி இன்று பாதியில் நிற்கிறது. இதுவரையிலே எமக்கு கிடைத்திருப்பது, இடைக்கால அறிக்கை என்ற ஓர் ஆவணம் மட்டுமே. இதற்கு முன் எங்கள் முன்னோர் எழுதி வைத்த ஆவணங்களுடன் இதையும் அடுக்கி வைக்கப் போகிறோமா என நாம் தீர்மானிக்க வேண்டும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் பொறுப்புக்கூறல், என்பது சீர்கெட்டுப் போய் இன்று அம்பாறை, கண்டி வரைக்கும் வந்து விட்டது. படைத்தரப்பு, மத சீருடைகள் அணிந்து இருந்தால், சிங்கள பெளத்தர் எதையும் செய்துவிட்டு தப்பி விடலாம் என்ற நிலைமை உருவாகி விட்டது. மறுபுறத்தில் தமிழ் அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்பட வில்லை.
ஆகவேதான் இரண்டு அசுரர்களில் எந்த அசுரன், அசுரத்தனம் குறைந்தவன் என்று கூட்டிக்கழித்துத் தேடி, அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், அபிவிருத்தி ஆகிய இலக்குகளை அடைய புதிய வழிகளைத் தேடுவது எனது நோக்கம் ஆகியுள்ளது. அந்த வழியை எங்கள் அரசுக்கு உள்ளேயே தேடும் நோக்கில் நாம் இருகின்றோம். பழைய ஆட்சியரை கொண்டு வந்து சிம்மாசனத்தில் அமரச் செய்ய விரும்பவில்லை.- என்றுள்ளது.