சவூதிஅரேபியாவில் தமாம் நகரில் பணிப் பெண்ணாகக் கடமையாற்றியபோது உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் சடலம் இரண்டரை வருடங்களின் பின்னர் நேற்று முன்தினம் மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உடபுஸல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயின் சடலமே இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
வறுமை காரணமாக 1995 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்குப் பணிப் பெண்ணாகச் சென்ற குறித்த பெண், 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
தாய் உயிரிழந்தார் என்று கிடைத்த தகவலுக்கு அமைய அவரது மகன் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்துக்கு அறிவித்துள்ளார். இதன்படி உடலை இலங்கைக்குக் கொண்டுவருதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும், இரண்டரை வருடங்களுக்குப் பின்னரே சடலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவரது இறப்பில் சந்தேகம் இருக்கிறது என்று தெரிவித்து உறவினர்கள் விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். சடலம், இறப்பு விசாரணைகளுக்காக நீர் கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.