பள்ளிகளில் நிகழும் துப்பாக்கி சூட்டை தடுக்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்கப் போவதாக ட்ரம்ப் அறிவித்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.
அமெரிக்காவில் பள்ளிகளில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. ஃப்லோரிடா மாகாணத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்தது. அதில் சுமார் 17 பேர் மரணம் அடைந்தனர். அதை ஒட்டி முன்னாள் மாணவர் ஒருவரை கைது செய்து காவல் துறை விசாரித்து வருகிறது. இந்த துப்பாக்கி தாக்குதல்களை எதிர்த்து கடும் போராட்டம் நடந்து வருகிறது.
இதையொட்டி ட்ரம்ப் ஒரு சில தடை உத்தரவுகள் பிறப்பித்தார். தற்போது துப்பாக்கி சூட்டை தடுக்க ஒரு விபரீத யோசனையை ட்ரம்ப் கூறி உள்ளார். அவர், “ஒரு ஆசிரியர் துப்பாக்கி சுடுவதில் திறமையானவராக இருந்தால் அவரால் பள்ளிகளில் நடைபெறும் துப்பாக்கி தாக்குதல்களை விரைவாக தடுக்க முடியும். எனவே 20% ஆசிரியர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற வேண்டும் அப்படி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படும்” என தெரிவித்தார்.
அதிபர் ட்ரம்ப் கூறிய இந்த கருத்து மக்களிடையே பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. மேலும் துப்பாக்கி சூட்டை அடியோடு நிறுத்த வழி காணாமல் வன்முறையை தூண்டும் வகையில் அவர் பேசி உள்ளதாக மக்கள் கூறி உள்ளனர். அவருடைய இந்த பேச்சு கடும் சர்ச்சையாக மாறி உள்ளது.