Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து தெலுங்குதேசம் வெளியேறுகிறதா?

February 4, 2018
in News, Politics, Uncategorized, World
0

பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்து, நான்காண்டுகள் நிறைவடைய இருக்கிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் சூழ்நிலையில், இப்போதே நாடு முழுவதும் தேர்தலுக்கான ஃபீவர், பல மாநிலங்களில் தொற்றிக்கொண்டுள்ளது என்றே சொல்லலாம்.

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி முதல் தேதியன்று, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த, 2018-19-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்தே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகப் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். எந்தவொரு புதிய கட்டண உயர்வையும் அறிவிக்காமலும், வருமான வரி உச்சவரம்பை உயர்த்தாமலும் விவசாயம் மற்றும் கிராமப்புறங்களின் மேம்பாட்டைக் கருத்தில்கொண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ராஜஸ்தான், மேற்குவங்க மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பி.ஜே.பி. தோல்வியடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள், பி.ஜே.பி-யுடன் இணைந்து மீண்டும் தேர்தலைச் சந்திக்குமா என்ற ஐயம் இப்போதே எழத்தொடங்கியுள்ளது. பி.ஜே.பி-யுடன் முக்கியக் கூட்டணிக் கட்சிகளான தற்போதுள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்குதேசம் ஆகியவற்றில், சிவசேனா தனித்துப் போட்டியிடப்போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தைப் பொறுத்தவரை, பி.ஜே.பி-யுடன் இணக்கமான போக்கைக் கொண்டிருந்தாலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலைப் போன்ற தொகுதிப்பங்கீடு என்று பி.ஜே.பி. தரப்பில் வலியுறுத்தப்பட்டால், அவர் கூட்டணியை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், ஐக்கிய ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும். மகாராஷ்டிராவிலும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் தனித்தனியாகவோ அல்லது கூட்டணி அமைத்தோ போட்டியிடும்பட்சத்தில், பி.ஜே.பி-க்கு வலுவான எதிர்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, அம்மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளதால், பி.ஜே.பி. தனித்துப் போட்டியிடுமா என்பது இன்னமும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய பி.ஜே.பி. அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். இதனால், தெலுங்கு தேசம் கட்சி அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும், ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனித்தோ அல்லது பி.ஜே.பி. அல்லாத கட்சிகளுடன் இணைந்தோ போட்டியிட முடிவுசெய்யும் என்று பரவலாக இப்போதே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதற்கு ஏதுவாக தெலுங்குதேசம் கட்சியின் முக்கியத் தலைவர்கள், சந்திரபாபு நாயுடுவிடம் பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளனர். பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்து முடிவெடுப்பதற்காக தெலுங்குதேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை விஜயவாடாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

சாட்சிகளை நேரில் ஆஜர்படுத்தாத சூளைமேடு காவல் ஆய்வாளருக்கு எதிராக வாரண்ட்

Next Post

சிறையில் உள்ள லாலுவுக்கு ஜாமீன் மறுப்பு

Next Post
சிறையில் உள்ள லாலுவுக்கு ஜாமீன் மறுப்பு

சிறையில் உள்ள லாலுவுக்கு ஜாமீன் மறுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures