மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது திருப்பும் வகையிலான கருத்துகளை முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளியிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் தொடர்பில் தமக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதன் தாற்பரியம் புரியவில்லை என ரவி கருணாநாயக்க ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் மத்திய வங்கியோ அல்லது அரச வங்கிகளோ தமது அமைச்சின்கீழ் இயங்கவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்நிலையில் தமக்கு எதிராக எவ்வாறு குற்றம் சுமத்தப்படுகின்றது என்பது தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் தான் 25 ஆண்டுகளாக இருப்பதாகவும், தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த பலர் முயற்சித்துவருவதாகவும், அதற்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தமக்கு கிடைக்கப்பெற்றதன் பின்னர் இந்த விடயம் குறித்து விரிவாக தெளிவுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் காலத்தில் மத்திய வங்கியோ, அரச வங்கிகளோ தமது அமைச்சின்கீழ் இயங்கவில்லை என்று கூறுவதன் மூலம் அவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இயங்கின என மறைமுகமாக ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.