“தமிழர்களுடைய ஜனநாயகப் போராட்ட வரலாற்றில் மிகவும் உச்சமான பலமாக இருந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் காலம் என்பதை யாவரும் அறிந்திருப்பீர்கள். அந்தப் பலத்தின் ஒரு பகுதியை தற்போது இழந்து நிற்கின்றோம்.”
– இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களுக்கான தேர்தல் தெளிவூட்டல் செயலமர்வு இன்று காலை நற்பிட்டிமுனை சுமங்கலி திருமண மண்டபத்தில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே மாவை எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்றைய காலகட்டத்தில் மூன்று கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பலமான ஜனநாயகக் கட்சியாக மக்கள் முன் தேர்தலில் குதித்திருக்கின்றன. இதனை அனைத்து தமிழ் மக்களும் நன்குணர்ந்து செயற்படவேண்டும்.
நாட்டிலே நடைபெற்ற எந்தப் போராட்டங்களாக இருந்தாலும் சரி எமது தமிழ் மக்கள் இழந்த இழப்புகள் சொல்லினால் அடக்கமுடியாது.
கூட்டமைப்பானது ஜனநாயக மக்கள் கட்சியை ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்தக் கட்சி தற்போது எமது கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றது.
இன்றைய காலத்திற்கேற்றாற்போல் எதிர்கால சந்ததியினராகிய இளைஞர்களை அரசியல் களத்தில் இறக்கவேண்டிய தேவையும் உளளது. அதனைக் கருத்திற்கொண்டு எமது கூட்டமைப்பானது இம்முறை முன்னால் போராளிகளையும் தேர்தல் களத்தில் களமிறக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறிருந்தபோதும் த.தே.கூட்டமைப்பிற்கு எதிராக பலவிதமான விமர்சனங்களை மாற்றுக்கட்சியினர் சுமத்துவதை ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது.
கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக எமது மக்களுக்கு விளக்கம் கொடுக்கவேண்டிய பொறுப்பு ஒவ்வொருவரிடமும் இருக்கின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பலமாக இருந்த காலத்தில் ரணில் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துடன் 2002இல் போர் நிறுத்தம் ஒன்றை செய்திருந்தார்கள். அந்தப் போர் நிறுத்தமானது சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின்கீழ் இருக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் ஒஸ்லோவில் நோர்வே நாட்டு பிரதிநிதிகளுடன் நடைபெற்றது.
அந்தக் காலகட்டத்தில் எமது கட்சியின் தலைமை பகிரங்கமாகவே அறிக்கைவிட்டிருந்தது. அதாவது, இங்கு நடைபெறும் பேச்சுகளை தமிழீழ விடுதலைப்புலிகளுடன்தான் பேசவேண்டும் என்று பகிரங்கமாகவே கூறியிருந்தோம் அவ்வாறுதான் எமது நிலைப்பாடு அமைந்திருந்தது.
கடந்த 30 வருடங்களாக நடைபெற்றுவந்த ஆயுதப் போராட்டமானது 2009 மே 18 அன்று ஓர் எல்லையை அடைந்தது. அதன்பிற்பாடு தமிழ் மக்களுடைய உச்சபலம் வழுவிழந்து காணப்பட்டது. அவ்வாறு இருந்தபோதும் எமது மக்கள் தங்களது பலத்தை தேர்தல் காலங்களில் வாக்குப்பலம் மூலம் நிரூபித்து வெற்றியும் கண்டிருக்கின்றார்கள்.
எமது மக்கள் ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்களது உடமைகளும் அழிந்து நாசமாகின. அவை அனைத்தையும் மக்கள் இழந்தபோதும் அவர்களது உரிமையைத் தங்களிடமுள்ள வாக்குப் பலம் மூலம் நிரூபித்திருந்தார்கள்.
இதேபோன்றுதான் ஆயுதப் போராட்டம் முடிவுற்றதன் பின்பு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் எமது மக்கள் த.தே.கூட்டமைப்புத்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை நிரூபிக்கத் தவறவில்லை. அவ்வாறு நிரூபித்ததன் காரணமாகத்தான் கூட்டமைப்புடன் பேசவேண்டும் என்று சம்பந்தன் தலைமையிலான குழுவை அமெரிக்கா அழைத்து தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கேட்டறிந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது எம்மிடையே உள்ள மாற்றுக்கட்சிகள் புதிய அரசியலமைப்பு தொடர்பாக மாறுபட்ட கருத்துகளை முன்வைத்துவருகின்றன. அந்தவகையிலேதான் சில பத்திரிகைகளும் ஒற்றையாட்சி தொடர்பான கருத்துகளை முன்வைத்துவருகின்றன. எமது கட்சியானது ஒருமித்த நாட்டுக்குள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்திவருகின்றது. இதனை தெளிவற்றவர்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்” – என்றார்.