ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் போட்டியிடப் போகிறார் என்ற தகவல், ஆளும்கட்சி தரப்பை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. ‘ தொகுதிக்குள் பெருகியிருக்கும் தலித், தெலுங்கு வாக்குகளைக் குறிவைத்துக் களம் இறங்க முடிவு செய்திருக்கிறார் விஷால். அரசியலில் விஜயகாந்த் போல, தனக்கான இடத்தை அவர் தேர்வு செய்ய இருக்கிறார்’ என்கின்றனர் சினிமா வட்டாரத்தில். சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவோடு களம் இறங்குகிறார் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ்.
அ.தி.மு.க சார்பில் மதுசூதனனும் நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயமும் போட்டியிடுகின்றனர். தினகரன், தீபா ஆகியோர் தனித்துக் களம் இறங்க உள்ளனர். இந்நிலையில், நடிகர் விஷால் போட்டியிட இருக்கிறார் என்ற தகவல் வெளியானது.
இதுகுறித்து பேசிய விஷால் ஆதரவாளர் ஒருவர், ” நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தை அடுத்து நேரடி அரசியலில் களம் இறங்க நினைக்கிறார் விஷால். நடிகர் விஜய் போல அரசு ஆதரவு நிலையில் இருந்து அரசியலில் நுழைய அவர் விரும்பவில்லை. கமல் போல எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுக்க நினைக்கிறார். இதன்மூலம் தனக்கான அரசியல் இமேஜை வளர்த்துக் கொள்ள விரும்புகிறார்.
ஆர்.கே.நகரில் வெற்றி கிடைப்பதைவிடவும் பெருவாரியான வாக்குகளை வாங்கினால், மக்கள் மத்தியில் தன்னைப் பற்றிய மதிப்பீடு உயரும் எனக் கணக்கு போடுகிறார். ஆர்.கே.நகர் முழுக்க 20 சதவீதமான தெலுங்கு பேசும் மக்கள் இருக்கிறார்கள். இதுதவிர, தலித், மீனவ மக்களும் தனக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறார்.
நாம் வேட்பாளராக நின்றால், ஆளும்கட்சி இணையான வாக்குகளைப் பெறலாம்’ எனத் திட்டம் வகுத்திருக்கிறார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் போல, அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வருகிறார். ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்து விஜயகாந்த் விலகியிருப்பதால், தன்னுடைய தலைமையை மக்கள் ஏற்பார்கள் எனவும் கணக்குப் போடுகிறார். அதன் தொடக்கமாக ஆர்.கே.நகர் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறார். அவர் வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை” என்றார்.