கனடா நாட்டில் மூவரை கொலை செய்துவிட்டு தப்ப முயன்ற வாலிபர் ஒருவரை பொலிசார் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள கியூபெக் மாகாணத்தில் உள்ள Akulivik என்ற கிராமத்தில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.நேற்று காலை நேரத்தில் 19 வயதான வாலிபர் ஒருவர் கத்தியுடன் வீடுகளில் புகுந்து 5 பேரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இத்தாக்குதலில் 10 வயது சிறுமி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் அங்கு வந்து சேர்ந்தபோது மற்றொரு வீட்டில் நுழைய அந்த வாலிபர் முயன்றுள்ளார். ஆனால், பொலிசார் வாலிபரை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர்.
பொலிசாரின் நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த வாலிபர் பொலிசாரை தாக்குவதற்கு முயன்றுள்ளார். வேறு வழியில்லாத பொலிசார் வாலிபர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில் வாலிபர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். வாலிபர் தாக்கியதில் 2 பேர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்னும் அபாயக்கட்டத்தை தாண்டவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வாலிபர் எதற்காக இத்தாக்குதலை நிகழ்த்தினார் எனத்தெரியவராத நிலையில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.