போராட்டத்தை இலங்கை அரசாங்கம் தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் எங்களைத் தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். தள்ளுவதற்கு பல முயற்சிகளில் பல முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எங்களுக்கு இந்த உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை. அதனால்தான் நாங்கள் நமது சர்வதேச பொறிமுறையை நோக்கி எங்களது போராட்டத்தை நகர்த்திக்கொண்டிருக்கின்றோம் என அம்பாறை மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.
எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க சர்வதேச மாநாட்டிற்கு ஆதரவு கோரும் முகமான கலந்துரையாடல் மற்றும் ஊடக சந்திப்பு இன்று (23) ஞாயிற்றுக்கிழமை காரைதீவு நூலக கேட்போர் கூடத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் பாஸ்கரன், உபதவிசாளர் கி.ஜெயசிறில், கல்முனை முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ச.சந்திரசேகரம், சிவில் சமூக செயற்பாட்டாளர் தா.பிரதீவன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது எதிர்வரும் 30ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள மாநாடு தொடர்பிலான தெளிவூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், மேற்கொள்ளப்பட்டுள்ள ஒழுங்குகள் தொடர்பிலும் தெரிவிக்கப்பட்டது.
இத்தோடு குறித்த நிகழ்விற்கு அனைத்து தரப்பில் ஒத்துழைப்புகளை எதிர்பார்ப்பதாகவும், உதவிகளும் கோரப்பட்டது.
இதன்போது வருகை தந்தவர்கள் தங்களின் ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு முன்வந்ததுடன் குறித்த மாநாட்டிற்கு தங்கள் ஆதரவுகளையும் வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.
இறுதியில் குறித்த மாநாடு தொடர்பில் தங்களின் ஆதரவு நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் முகமாக ஊடகசந்திப்பும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி,
எதிர்வரும் 30-ம் தேதி நடக்கவிருக்கும் அந்த சர்வதேச மாநாடானது, எங்களது உறவுகளைத் தேடிய இந்த 17 வருட கால போராட்டத்திற்கு எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது, எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையும் நீதியும் வேண்டி நாங்கள் பலவாறு பலமுறை பல ஜனாதிபதிகளிடம் மாறி மாறி அந்த பல ஜனாதிபதிகளிடம் கேட்டு நின்று எமக்கு எந்தவித தீர்வும் கிடைக்காத பட்சத்தில் நாங்கள் நம்ம சர்வதேசத்தை நோக்கி எங்களது இந்த உண்மைக்கும் நீதிக்குமான போராட்டத்தை நாங்கள் எடுத்துச் சென்று இருக்கின்றோம்.
எங்களது உறவுகளின் இந்த போராட்டத்தை இலங்கை அரசாங்கம் தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் எங்களைத் தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். தள்ளுவதற்கு பல முயற்சிகளில் பல முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எங்களுக்கு இந்த உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை. அதனால்தான் நாங்கள் நமது சர்வதேச பொறிமுறையை நோக்கி எங்களது போராட்டத்தை நகர்த்திக்கொண்டிருக்கின்றோம்.
எங்களது உறவுகளுடன் இருந்து தங்களது பிள்ளைகள் வருவார்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்து, வடக்கு கிழக்கில் 600-க்கும் மேற்பட்ட தாய்மார்களை நாங்கள் இதுவரை இழந்து நிற்கின்றோம். எங்களது தாய்மார்களுக்காக நாங்கள் இந்த மாநாட்டில் அவர்களுக்கான ஒரு நூல் வெளியீடும், அவர்களை அந்த தாய்மார்கள் உறவுகளைக் கௌரவிக்கும் ஒன்று அங்கு நடக்க இருக்கின்றது.
அதுமட்டுமல்ல, எங்களது காணாமல் போன உறவுகளின் நினைவுச் சின்னங்கள் அவர்கள் தங்கள் பிடிபடும்போதும், வலிந்து காணாமல் ஆக்கப்படும்போதும் தங்களது வீடுகளில் விட்டுச் சென்ற அவர்கள் பாவித்த ஒரு பொருள், அந்தப் பொருள்களை இன்று நாங்கள் காட்சிக்கு வைக்க இருக்கின்றோம், கண்காட்சிகள் அங்கு செய்ய இருக்கின்றோம்.
இவை அனைத்தையும் நாங்கள் 30-ம் தேதி சர்வதேச மாநாடாக தந்தை செல்வா மண்டபத்தில் நடத்த இருக்கின்றோம். இந்நிகழ்வில் அனைத்து உறவுகளையும், இங்கு கூடியிருக்கும் அனைவரையும் அன்பாக வந்து எங்களது போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என்று கேட்டுநிற்கின்றோம்.
அதுமட்டுமல்ல, இன்று எங்களது போராட்டத்தை எடுத்துச்செல்வதற்கு உங்களது ஒத்துழைப்பும், உங்களது ஆதரவும் எங்களுக்கு என்றும் வேண்டும் என்றும், இந்த ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து நாங்கள் இந்த போராட்டத்தை வலுச்சேர்க்க வருவீர்கள் என்று அனைவரையும் கையெந்தி வருக வருக என்று கேட்டுநிற்கின்றோம்.











