தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2” எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இப்போராட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
இதன்போது செயலணியினர் மேலும் கூறுகையில்,
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கடந்த ஆண்டு நீதியின் ஓலம் முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தொடங்கி 17ஆம் திகதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் “நீதியின் ஓலம் 2” எனும் போராட்டத்தின் வாயிலாக, தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படும்.
இறுதி நாளான 17ஆம் திகதி மாபெரும் பேரணியும் நடைபெறவுள்ளது.
ஆரம்ப நாளான 14ஆம் திகதி மாலை 4 மணிக்கு செம்மணியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நடைபெற்று, இறுதி நாளான 17ஆம் திகதி தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மக்கள் திரண்டு வருகை தருவதோடு, மாபெரும் பேரணி யாழ். நகரில் இடம்பெறும்.
இந்தப் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என தாயக செயலணியினர் தெரிவித்துள்ளனர்.













