நாட்டின் பல மாகாணங்களில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவித்து, இயற்கை அனர்த்த எச்சரிக்கை மையத்தினால் இன்று வியாழக்கிழமை (09) பிற்பகல் 3:30 மணியளவில் ‘அம்பர்’ நிறத்திலான வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை, ஏப்ரல் 10ஆம் திகதி அமுலாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்கள், கிழக்கு, வடமேற்கு மற்றும் வட மாகாணங்கள், வடமத்திய மாகாணம், மொனராகலை மாவட்டம் ஆகியவற்றுக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் இருக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் வெப்பம் தொடர்பான உடல் உபாதைகள் மற்றும் அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிகளவு நீர் மற்றும் திரவ உணவுகளை உட்கொள்ளுதல். உச்சக்கட்ட வெப்பம் நிலவும் நேரங்களில் நேரடியாக சூரிய ஒளி படுவதைத் தவிர்த்தல்.
வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க வெளிப்புற உடல் உழைப்பு மற்றும் வேலைகளைக் கட்டுப்படுத்துதல். குறிப்பாக முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இது தொடர்பில் அதிக அவதானத்துடன் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

