தற்போதைய நெருக்கடியான காலப்பகுதியை கருத்தில் கொண்டு மின்சாரம் மற்றும் பிற வசதிகளை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பில் அரச நிறுவனங்களுக்கு புதிய வழிக்காட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பான சுற்றறிக்கையை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயக அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அணைக்கப்படும் ACக்கள்
அதன்படி, அனைத்து அமைச்சுகள், மாகாண சபைகள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் உடனடியாக மின்சார சேமிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

சுற்றறிக்கையின் படி, அனைத்து அரசு நிறுவனங்களும் பிற்பகல் 3 மணிக்குள் குளிரூட்டிகளை (AC) அணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் தனியார் நிறுவனங்களும் இதே நடவடிக்கையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
இசை நிகழ்ச்சிகள்
அத்தோடு, பல்வேறு இடங்களில் உள்ள டிஜிட்டல் விளம்பரத் திரைகள் இரவு 8 மணிக்குள் அணைக்கப்பட வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தெருவிளக்குகளை அணைப்பதற்கான உரிய திட்டங்களைச் செயல்படுத்துமாறு உள்ளூராட்சி அமைப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இசை நிகழ்ச்சிகள் மற்றும் அதுபோன்ற நிகழ்வுகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கூடும் பெரிய அளவிலான கூட்டங்கள், தேசிய மின் கட்டமைப்புக்குப் பதிலாக மாற்று மின் மூலங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
