மும்பை வான்கடே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (29) மிகவும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்திய 19ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் இரண்டாவது போட்டியில் 5 பந்துகள் மீதம் இருக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது.

கணிசமான மொத்த ஓட்டங்கள் பெறப்பட்ட போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 221 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 19.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 224 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 2012க்குப் பின்னர் மும்பை இண்டியன்ஸ் தனது ஆரம்பப் போட்டியில் வெற்றியீட்டியது இதுவே முதல் தடவையாகும்.

மேலும் ரெயான் ரிக்ல்டன், ரோஹித் ஷர்மா ஆகிய இருவரின் அதிரடி துடுப்பாடங்கள் மூலம் ஐபிஎல் இல் தான் எதிர்க்கொண்ட மிகப்பெரிய வெற்றி இலக்கை மும்பை இண்டியன்ஸ் விரட்டிப்பிடித்து வெற்றியீட்டியது.
ரெயான் ரிக்ல்டன், ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சகல பந்துவீச்சாளர்களையும் சிதறடித்து 72 பந்துகளில் 148 ஓட்டங்களைப் பகிர்ந்து அதிரடியான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ரோஹித் ஷர்மா 38 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் அடங்கலாக 78 ஓட்டங்களை விளாசினார்.
அவரை அடுத்து சூரியகுமார் யாதவ் 16 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார்.
மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ரெயான் ரிக்ல்டன் மொத்த எண்ணிக்கை 194 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தார்.
ரெயான் ரிக்ல்டன் 43 பந்துகளில் 4 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 81 ஓட்டங்களைக் குவித்தார்.
திலக் வர்மா 20 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (215 – 4 விக்.)
எனினும் வெற்றிக்கு தேவைப்பட்ட மீத ஓட்டங்களை அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (18 ஆ.இ.), நாமன் திர் (5 ஆ.இ.) ஆகிய இருவரும் பெற்றுக்கொடுத்தனர்.
முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்த 220 ஓட்டங்களைக் குவித்தது.
அணித் தலைவர் அஜின்கியா ரஹானே, அங்க்ரிஷ் ரகுவன்ஷி, பின் அலன், ரின்கு சிங் ஆகியோரின் அதிரடிகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தன. ஆனால் இறுதியில் அவை வீண் போயின.
அஜின்கியா ரஹானே, பின் அலன் ஆகிய இருவரும் 32 பந்துகளில் 69 ஓடங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
முதலாவதாக ஆட்டம் இழந்த பின் அலன் 17 பந்துகளில் 31 ஓட்டங்களைக் குவித்தார்.
அடுத்து களம் புகுந்த கெமரன் க்றீன் 18 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து அஜின்கியாக ரஹானே 40 பந்துகளில் 3 பவுண்ட்றிகள். 5 சிக்ஸ்கள் உட்பட 67 ஓட்டங்களைக் குவித்து களம் விட்டகன்றார். (145 – 3 விக்.)
இதனை அடுத்து அங்க்ரிஷ் ரகுவன்ஷி, ரின்கு சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் வெறும் 30 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கை 200 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.
அங்க்ரிஷ் ரகுவன்ஷி 29 பந்துகளில் 6 பவுண்டறிகள். 2 சிக்ஸ்களுடன் 51 ஓட்டங்களைக் குவித்தார்.
மறுபக்கத்தில் ரின்கு சிங் 21 பந்துகளில் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவிச்சில் ஷர்துல் தாகூர் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைபற்றினார்.
ஆட்டநாயகன்: ஷர்துல் தாகூர்.
