QR குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தைக் கருத்திற்கொண்டு நாளை வியாழக்கிழமை (19) முதல் எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எரிபொருள் நிலையங்களில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரட்டை எண்கள் (0, 2, 4, 6, 8): வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் இரட்டை எண்ணாகவோ அல்லது ‘0’ ஆகவோ இருந்தால், இரட்டைப்படை திகதிகளில் (உதாரணமாக: மார்ச் 20, 22…) எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஒற்றை எண்கள் (1, 3, 5, 7, 9): இறுதி இலக்கம் ஒற்றை எண்ணாக இருந்தால், ஒற்றைப்படை திகதிகளில் (உதாரணமாக: மார்ச் 19, 21…) எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச எரிபொருள் விநியோகப் பாதைகள் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாட்டுக்குள் எரிபொருளுக்கான கேள்வி அசாதாரணமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கையிருப்பிலுள்ள எரிபொருள் இருப்பைப் பாதுகாப்பாக முகாமைத்துவம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, கடந்த 16 ஆம் திகதி முதல் மீண்டும் QR குறியீட்டு முறையைச் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இலக்கத் தகடு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

