Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை அடுத்து நிலைமைகளை FIFA கண்காணித்து வருகிறது

March 2, 2026
in News, Sports, Sri Lanka News, World, முக்கிய செய்திகள்
0
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை அடுத்து நிலைமைகளை FIFA கண்காணித்து வருகிறது

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல்களினால் பதற்றம் அதிகரித்துவருவது  குறித்து உலக கால்பந்தாட்டத்தை நிர்வகிக்கும் சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனம் (FIFA) உன்னிப்பாக அவதானித்து வருவதாக பீபா செயலாளர் நாயகம் மெத்தியாஸ் கிராஃப்ஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார்.

மேலும், உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ள சகல அணிகளுக்கும் பாதுகாப்பான போட்டியை வழங்குவதில் பீபா முழுமையான அர்ப்பணிப்புடன் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் பெப்ரவரி 28ஆம் திகதியன்று ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதலை ‘பெரிய போர் நடவடிக்கை’ என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விபரித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியம், கத்தார், குவைத் மற்றும் பாஹ்ரெய்ன் உட்பட வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க விமானத் தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல்களைத் தொடுத்தது.

உலகக் கிண்ண ஜீ குழுவில் ஈரான்அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகியன கூட்டாக நடத்தும் 2026 பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட பிரதான சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ள ஈரான், ஜீ குழுவில் பெல்ஜியம், எகிப்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இடம்பெறுகிறது.
ஏற்கனவே வெளியிடப்பட்ட போட்டி அட்டவணையின் பிரகாரம் ஈரான் ஜூன் 15ஆம், 21ஆம் திகதிளில் லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் இரண்டு போட்டிகளிலும், ஜூன் 26ஆம் திகதி சியெட்ல் நகரில் ஒரு போட்டியிலும் விளையாட உள்ளது.


இந் நிலையில், கார்டிஃபில் நடைபெற்ற 140ஆவது பீபா வருடாந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மெத்தியாஸ் கிராஃப்ஸ்ட்ரோம், இது தொடர்பாக ஏற்கனவே கலந்துரையாடல்கள் நடைபெற்று விட்டதாகவும், விரிவான கருத்து தெரிவிப்பதற்கான அவரசம் ஏற்படவில்லை எனவும் வலியுறுத்தினார்.


‘உங்களைப் போலவே இன்று காலை நானும் (ஈரான் பற்றிய) செய்திகளைப் வாசித்தறிந்தேன்’ என்று அவர் கூறினார்.
‘நாங்கள் இன்று ஒரு கூட்டத்தை நடத்தினோம், விரிவாக கருத்து தெரிவிப்பதற்கு இப்போதைக்கு அவசியம் ஏற்படவில்லை. எனினும், உலகெங்கிலும் உள்ள அனைத்து விடயங்களினதும் முன்னேற்றங்களை நாங்கள் கண்காணிப்போம்.


‘சகல அணிகளினதும் பங்கேற்புடன் இறுதி சுற்றுக்கான குழுநிலைப் படுத்தலை வொஷிங்டனில் நடத்தினோம், மேலும் எங்கள் கவனம் எல்லாம் சகல அணிகளும் பங்குபற்றும் பாதுகாப்பான உலகக் கிண்ணத்திலேயே இருக்கிறது. போட்டியை முன்னின்று நடத்தும் மூன்று வரவேற்பு நாடுகளின் அரசாங்கங்களுடனும் நாங்கள்  எப்போதும் போலவே எந்த நேரத்திலும் தொடர்புகொள்வோம். அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள்’ என்றார்.

பயணத் தடை மற்றும் கட்டுப்பாடுகள்

ராஜதந்திர பின்னணியில் ஈரான் பிரஜைகளைப் பாதிக்கும் பயணக் கட்டுப்பாடுகள் அடங்கும். விரிவாக்கப்பட்ட அமெரிக்க பயணத் தடைக்குள் ‘முழுமையான தடைகள்’ பிரிவின் கீழ் உள்ள 19 நாடுகளில் ஈரானும் அடங்கும். இருப்பினும், ‘உலகக் கிண்ணம், ஒலிம்பிக் அல்லது ஏனைய முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்குப் பயணம் செய்யும் பயிற்றுநர்கள், தேவையான துணைப் பாத்திரத்தைச் செய்யும் உதவியாளர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் உட்பட எந்தவொரு வீரர் அல்லது அணியின் உறுப்பினருக்கும்’ விலக்களிப்பு பொருந்தும். FIFA நுழைவு அனுமதி என்று அழைக்கப்படும் ஒரு பிரத்யேக FIFA உலகக் கிண்ண விசா, ஆதரவாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அது ஏற்கனவே உள்ள பயணத் தடைகளை மீறுவதாக அமையாது.

ஈரான் வீரர்களுக்கு விசா சிக்கல்

தேசிய அணியில் இடம்பெறும் சில வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இராணுவ பின்னணி காரணமாக விசா சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் மெஹ்தி தாஜ் முன்னர் எச்சரித்திருந்தார்.
அமெரிக்க அரசாங்கத்தால் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என விபரிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல்படையில் பல ஈரான் சர்வதேச வீரர்கள் பணியாற்றியுள்ளனர். இந் நிலையில் சாத்தியமான மறுப்புகளை அமெரிக்க வெளியுறவுத்துறை நிராகரிக்கவில்லை.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைக் கொன்றதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில், போட்டியில் பங்கேற்பது தொடர்பாக தாஜ் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பினார். இன்று நடந்ததையும் இந்த அமெரிக்க தாக்குதலையும் வைத்து உலகக் கிண்ணத்தை நாம் எதிர்கொள்ளமுடியும் என்பது சாத்தியமில்லை. ஆனால் இறுதி முடிவு சம்பந்தப்பட்ட விளையாட்டு அதிகாரிகளால் எடுக்கப்பட வேண்டும்’ என ஈரானிய தொலைக்காட்சி சேவையான தெஹ்ரானிடம் தாஜ் பேசியதாக ஸ்பானிய ஊடகம் மார்கா தகவல் வெளியிட்டுள்ளது.

லொஸ் ஏஞ்சலிஸில் அமைந்துள்ள சோஃபி விளையாட்டரங்கில் நியூசிலாந்துக்கு   எதிராக தனது உலகக் கிண்ண  போட்டியை ஈரான் தொடங்குவதற்கு 107 நாட்களுக்கு முன்னர் இந்த செய்தி அறிக்கை வெளியாகியுள்ளது.

ஏதேனும் அணி விலகினால் மாற்று அணி

FIFA விதிமுறைகளின் பிரகாரம் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் ஏதேனும் அணி விலகினால் மாற்று அணி ஒன்று உள்வாங்கப்படலாம். பொதுவாக தகுதி தரவரிசைப் பிரகாரம் மற்றும் பெரும்பாலும் அதே கூட்டுசம்மேளனத்திலிருந்து ஒரு அணி உள்வாங்கப்படும். ஆசிய தகுதிச் சுற்றில் அதிக தரவரிசையில் உள்ள தகுதி பெறாத அணியாக ஐக்கிய அரபு இராச்சியம் திகழ்கிறது.ஐக்கிய அரபு இராச்சியத்தை ப்ளே ஓவ் சுற்றில் 3–2 என்ற ஒட்டுமொத்த கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டதன் மூலம் கண்டங்களுக்கு  இடையிலான   பிளே-ஆஃப் சுற்றுவரை ஈராக் முன்னேறியுள்ளது.கண்டங்களுக்கு இடையிலான தீர்மானம் மிக்க போட்டியில் பொலிவியா அல்லது சூரிணாமை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி மொன்டரே விளையாட்டரங்கில் ஈராக் எதிர்த்தாடவுள்ளது.உலகக் கிண்ணத்தில் விளையாட ஈராக் தகுதிபெற்று, ஈரான் பங்குபற்ற மறுத்தால் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு உலகக் கிண்ணத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், இதுவரை எவ்வித முடிவும் சம்பிரதாயபூர்வமாக எடுக்கப்படவில்லை.

நெவில் அன்தனி

வீரகேசரி

Previous Post

மருதனார்மடம் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures