இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதரகம், சுவிற்சர்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான 70 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு “70 Years | 70 Faces” (70 ஆண்டுகள் | 70 முகங்கள்) என்ற சிறப்பு கண்காட்சியை ஏற்பாடு செய்து கொண்டாடுகிறது.

1956 ஆம் ஆண்டு தொடங்கிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவு, பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு மற்றும் நீடித்த நட்புறவை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஏழு தசாப்தங்களாக இரு நாடுகளும் இராஜதந்திரம், வர்த்தகம், கல்வி, கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் வலுவான கூட்டாண்மையை உருவாக்கியுள்ளன.
இந்த வரலாற்று மைல்கல்லை நினைவுகூரும் வகையில், இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்த பங்களித்த 70 சிறப்பு நபர்களை கௌரவிக்கும் நோக்கில் “70 Years | 70 Faces” கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியின் மூலம், சுவிஸ்–இலங்கை ஒத்துழைப்பின் பல்வேறு தளங்களில் தங்கள் பங்களிப்பைச் செய்த நபர்களின் கதைகள், அனுபவங்கள் மற்றும் சாதனைகள் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. புகைப்படங்கள், கண்காட்சிப் பலகைகள் மற்றும் தனிப்பட்ட சான்றுகள் மூலம், இருதரப்பு உறவை வலுப்படுத்திய முக்கிய தருணங்கள் மற்றும் மனிதர்கள் முன்னிறுத்தப்படுகின்றனர்.
இந்தக் கண்காட்சி, 2026 மார்ச் 7 முதல் 14 ஆம் திகதி வரை, Radicle Gallery, இலக்கம் 103, சத்தம் வீதி, கொழும்பு – 01 (டி மெல் கட்டிடம்) என்ற இடத்தில் நடைபெறும். தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு தசாப்தங்களாக நீடித்து வரும் சுவிஸ்–இலங்கை நட்புறவின் பயணத்தைப் பிரதிபலிக்கும் இந்தக் கண்காட்சி, இரு நாடுகளின் பகிரப்பட்ட வரலாறு, ஒத்துழைப்பு மற்றும் சாதனைகளை ஆராய்வதற்கான அரிய வாய்ப்பாக அமைகிறது.
சுவிட்சர்லாந்து தூதரகம், இந்த சிறப்பு நிகழ்வில் பொதுமக்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் கலந்து கொண்டு, இரு நாடுகளுக்கிடையிலான உறவின் மனிதநேய பரிமாணங்களை நெருங்கிப் பார்வையிடுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

