நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலைமைக்கு மத்தியில் இலங்கையுடன் நின்றமைக்கு அமெரிக்காவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அவர் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில், தேவையான நேரத்தில் தக்க உதவிகளை வழங்கியமைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் ஜனாதிபதி அநுர நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உதவி
சீரற்ற வானிலை காரணமாக பேரிடர் நிலைமைக்கு இலங்கை முகங்கொடுத்த சந்தர்ப்பத்தில் விரைவாக C-130 வகையிலான இரு நிவாரண விமானங்களை இந்நாட்டிற்கு அனுப்பியும் இரண்டு மில்லியன் டொலர் அவசர நிதி நிவாரணத்தையும் அமெரிக்கா வழங்கியிருந்ததாக பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“இவ்வாறு பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களில் உறுதியாக வேரூன்றிய நமது நீடித்த கூட்டாண்மையின் வலிமையையும், நமது மக்களிடையேயான நெருங்கிய உறவுகளையும் பிரதிபலிக்கிறது” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
