மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தாலையிட்டு மட்டு நகர் பகுதியை தவிர ஏனைய பல பிரதேசங்களில் கடைகள் திறக்கப்பட்டு வழமை போல மக்களின் திங்கட்கிழமை (18) இயல்பு வாழ்கை இடம்பெற்றது.
அதேவேளை நகரில் திறந்திருந்த சில வர்த்தக நிலையங்களை மாநகரசபை முதல்வர் மூடுமாறும் கோரியதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் பெரும் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து முதல்வருக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் 5 மாநகரசபை உறுப்பினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இலங்கை தமிழரசு கட்சி வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து, கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு கட்சி ஆட்சி செய்யும் மாநகரசபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி அழைப்பு விடுத்தனர்.
இதனையடுத்து இன்று காலையில் கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, செங்கலடி, ஓட்டமாவடி, மற்றும் மட்டக்களப்பு நகரை தவிர ஏனைய பிரதேசங்களில் வழமைபோல கடைகள் திறக்கப்பட்டு போக்குவரத்துகள் சுமுகமாக இடம்பெற்றதுடன் அரச திணைக்களங்கள், வங்கிகள் பாடசாலைகள் இயங்கியன. அதேவேளை பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைந்து காணப்பட்டதுடன் பல வர்த்தக நிலையங்கள் திறந்து வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை தமிழரசு கட்சி ஆட்சியை கைப்பற்றிய சில பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பொதுசந்தைகள் மூடப்பட்டதுடன் சில வர்த்தக நிலையங்கள் திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டன.
இருந்தபோதும் மட்டக்களப்பு நகரில் உணவகங்களை தவிர எனைய கடைகள் அனைத்தும் காலை 10.00 மணிக்கு திறப்பது வழைமையானது இந்த நிலையில் நகரில் காலையில் சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் மட்டு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் சென்று திறக்கப்பட்ட கடைகளை மூடுமாறு தெரிவித்தார்.
அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர்கள் சென்று கடைகளை மூடவேண்டாம் திறக்குமாறு தெரிவித்து ஏட்டிக்கு போட்டியாக இரு கட்சிகளும் செயற்பட்டன.
இந்த நிலையில் மாநகரசபை முதல்வர் வாகனத்தில் சென்று கடைகளை மூடுமாறு தெரிவித்தபோது அங்கு வர்த்தகர்களுக்கும் முதல்வருக்கும் இடையே பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இதனையடுத்து வர்த்தகர்கள் மூடுவதா ? திறப்பதா? என என்ன செய்வது என தெரியாது திண்டாடிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் 10.00 மணிக்கு பின்னர் சில வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை திறந்தனர்.
இந்த நிலையில் மாநகரசபை முதல்வர் அரச வாகனத்தை ஹர்த்தாலுக்கு சட்டவிரோதமாக பயன்படுத்தி கடைகளை மூடுமாறும் அல்லது அனுமதிப் பத்திரம் நிறுத்தப்படும் என வர்த்தகர்களை மிரட்டி அதிகார துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு தெரிவித்து மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் 5 உறுப்பினர்கள் முறைப்பாடு செய்ததுடன் ஈரோஸ் கட்சியின் இரா. பிரபாகரன் வர்த்தகர்களை மிரட்டி கடைகளை முதல்வர் பூட்டியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து மாநகர சபை முதல்வரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.



