சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்பிச் சென்ற மூன்று இலங்கையர்கள் தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காவது மணல் திட்டில் வைத்து இந்திய கடலோர பொலிஸ் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை (27) இருந்து தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில் இந்திய கடலோர படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து படகில் இந்திய கடலோர பொலிஸ் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போதுதனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காம் மணல் திட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற மூன்று பேரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து கொடுப்பனவு அட்டை, கடன் அட்டை மற்றும் இலங்கை பணம் 46,000 உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இதன்போது சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்த இந்திய கடலோர பொலிஸ் படையினர் சந்தேக நபர்களை தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரைக்கு அழைத்து வந்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 34,43 மற்றும் 33 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும் தமிழகத்திற்குள் சென்ற பின்னர் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.