யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக வரக்கூடியவர் விலை போகாதவராகவும் தமிழ் தேசிய பற்றுடன் செயற்படக்கூடியவராகவும் இருக்க வேண்டும் என யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை (08) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் பதவி என்பது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விடவும் முக்கியமானது.
யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் நாடாளுமன்ற உறுப்பினரை விட சிறப்பாக செயற்படக்கூடியவராக இருக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் இராஜ தந்திரிகள் யாழ்ப்பாண முதல்வரை நிச்சயம் சந்திப்பார்கள். அவ்வாறானவர்களுடன் இராஜ தந்திர ரீதியாக உரையாட வேண்டும். யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கக்கூடிய அபிவிருத்தித் திட்டங்கள், தமிழ் மக்களின் அபிலாசைகள், அவர்களின் பிரச்சினைகள் என்பவற்றை எடுத்துக்கூற வேண்டும்.
எனவே, முதல்வராக தமது கட்சி சார்பாக முன்னிலைப்படுத்தப்படுவர் சிறப்பானவராக இருக்க வேண்டும் என கட்சிகள் பொறுப்புடன் உணர்ந்துகொண்டு அதற்கு ஏற்றது போல் முதல்வரை தெரிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.