மெல்பர்னில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாடிவரும் சேர்பிய வீரர் நொவாக் ஜொக்கோவிச்சுக்கு ரபாயல் நடாலின் க்ராண்ட் ஸ்லாம் சாதனையை சமப்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
க்ராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் 22 சம்பியன் பட்டங்களுடன் ஆடவர் பிரிவில் அதிக சம்பியன் பட்டங்களை வென்றவர் என்ற சாதனையை ரபாயல் நடால் தன்னகத்தே கொண்டுள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ஆம் சுற்றில் உபாதைக்கு மத்தியில் விளையாடிய நடப்பு சம்பியன் ரபாயல் நடால், தரவரிசையில் 65ஆவது இடத்திலுள்ள அமெரிக்க வீரர் மெக்கென்ஸி மெக்டொனல்டிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.
ரொட் லேவர் அரினா அரங்கில் நடைபெற்ற அப் போட்டியில் மெக்டொனல்டிடம் 4 – 6, 4 – 6, 5 – 7 என்ற புள்ளிகளைக் கொண்ட 3 நேர் செட்களில் நடால் தோல்வி அடைந்தார்.
இதனை அடுத்தே நடாலின் 22 க்ராண்ட் ஸ்லாம் வெற்றிகள் என்ற சாதனையை சமப்படுத்துவதற்கான வாய்ப்பு ஜொக்கோவிச்சுக்கு தோன்றியுள்ளது.
இதற்கு முன்னர் 2016 அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றுடன் நடால் தோல்வி அடைந்து வெளியேறியிருந்தார்.
இது இவ்வாறிருக்க, கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத காரணத்தால் கடந்த வருடம் அவுஸ்திரேலியா பகிரங்க டென்னிஸ் போட்டியில் பங்குபற்ற முடியாது எனத் தெரிவித்து அவுஸ்திரேலியாவிலிருந்து அந் நாட்டு அரசினால் வெளியேற்றப்பட்ட ஜொக்கோவிச், கடந்த வருடம் விம்பிள்டனில் தனது 21ஆவது க்ராண்ட் ஸ்லாம் வெற்றியைப் பதிவு செய்திருந்தார்.
அதற்கு முன்னர் ரோலண்ட் கெரொஸில் நடைபெற்ற பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் டெனில் மெட்வடேவ்வை நடால் வெற்றிகொண்டு சாதனைமிகு 22ஆவது தடவையாக சம்பியனாகி இருந்தார்.
உபாதை காரணமாக மனோரீதியாக தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் நடால் தெரிவித்தார்.
இந்த உபாதையினால் தோல்வி அடைய நேரிட்டமை ஏமாற்றம் அளிக்கின்றபோதிலும் டென்னிஸ் விளையாட்டை நேசிப்பதாகவும் தொடர்ந்து அவ்விளையாட்டில் ஈடுபடவுள்ளதாகவும் 36 வயதான நடால் குறிப்பிட்டார்.