யாழ். பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டத்தரிப்பு முருகன் ஆலய நிர்வாக பிரச்சினை காரணமாக இன்று (09.11.2022) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரை அண்மையில் சந்தித்து ஆலய நிர்வாக ஊழல் மோசடி தொடர்பில் தீர்வுபெற்றுத் தருமாறு கோரிய, அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்த பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வாள் வெட்டுத்தாக்குதல்
அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்தவரின் வீட்டிற்கு வெகுமதி வழங்குவதாக தெரிவித்து உள்ளே சென்ற மூவரடங்கிய கும்பலால் “இனிமேல் ஆலய நிர்வாகத்தில் தலையிடுவியா” எனக் கேட்டு அவர் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாள்வெட்டுத் தாக்குதலின் போது பலத்த காயத்துக்குள்ளாகியவரை யாழ். போதனாவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அச்சத்தில் மக்கள்
வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலய நிர்வாக பிரச்சினையினை வடக்கு ஆளுநரிடம் முறையிட்டவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமையால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.