கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி கதையின் நாயகனாக நடித்து, இயக்கியிருக்கும் திரைப்படம் ‘காந்தாரா’. கன்னடத்தில் தயாராகி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கும் இந்த படம் தமிழிலும் மிக சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.
‘கேஜிஎஃப்’ படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக விஜய் கிரகந்தூர் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி, அச்யுத் குமார், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அரவிந்த் எஸ்.காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். இதன் கதை, திரைக்கதையை எழுதி, இயக்கி, நடித்திருப்பவர் ரிஷப் ஷெட்டி.

இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பு கடந்த சனிக்கிழமை (ஒக் 15) வெளியானது.
படத்தை பற்றி இயக்குநரும் கதாநாயகனுமான ரிஷப் ஷெட்டி கூறுகையில்,
காந்தாரா என்பது கர்நாடக மாநிலத்தின் அடர்ந்த வனத்தினூடாக இருக்கும் மர்மமான பகுதி. 18ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த பகுதி காவல் தெய்வத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இருக்கிறது.
வனங்களை பாதுகாக்க இந்திய அரசாங்கம் 1980ஆம் ஆண்டில் சட்டமொன்றை இயற்றியது. அதனை வனத்துறை அதிகாரிகள் அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு நேர்நிலையாக எடுத்துரைக்காததால், அவர்களுக்கும், அங்கு வசிக்கும் மக்களுக்கும் இடையே முரண்பாடு எழுந்தது.
இந்நிலையில் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே நடைபெறும் மோதலை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதனை காவல் தெய்வங்களை முன்னிலைப்படுத்திச் சொன்னால் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் ‘காந்தாரா’வை உருவாக்கினேன்.
காவல் தெய்வங்கள் தான் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் சமநிலையில் மனிதர்களை வைத்திருக்கும் சக்தி படைத்தவை என நினைக்கிறேன்.
‘காந்தாரா’ படத்தில் இடம்பெற்றிருப்பது போல் நான் சிறு வயதில் தெய்வ வேடமிட்டு வருபவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் அனைவரையும் சமமாகவே கருதுவார்கள்.
இது தற்போது எவ்விதமான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது என்பதனை பற்றி விவரிப்பதை விட, இதனை மையப்படுத்தி சமூகத்தில் ஒரு நேர்நிலையான அதிர்வலைகளை ஏற்படுத்த இயலும் என்பதை படைப்பாக்கியுள்ளேன் என்றார்.
