கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் போது துப்பாக்கிச்சூடு நடத்துமாறு இராணுவத்திற்கு உத்தரவிட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரும்பவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே, போராட்டக்காரர்களின் கோரிக்கையின்படி அவர் செயற்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறினார்.
அரசியல் ரீதியாக பாதகமான அறிக்கை

திறமையான எவருக்கும் ஆட்சியை வழங்கத் தயார் என முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகள் அறிவித்துள்ளனர். ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்க விரும்புவதாக கூறியதன் பின்னரே சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
இந்த அரசாங்கத்தை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகின்றார். அரசியல் ரீதியாக அது அவருக்கு பாதகமான அறிக்கை.
தன்னால் முன்மொழியப்பட்ட டலஸ் அழகப்பெரும அதிக வாக்குகளைப் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டால் அது சரியான ஆணை பெற்ற அரசாங்கமாக அமையும் என அவர் கூறுகிறார்.
ஆனால் தோற்ற பிறகு ஆணை இல்லை என்கிறார். இவ்வாறு நாடு முன்னேறுவது சாத்தியமில்லை. வளர்ந்த நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்படி நடந்து கொள்வதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.